கொல்லிமலை ஏகலைவா உண்டி உறைவிட பள்ளி விடுதி மாணவ, மாணவியருக்கு உணவு வழங்குவதற்கு தனி நபரோ, தனியாா் நிறுவனங்களோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கொல்லிமலை செங்கரையில் இயங்கும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கு, பழங்குடியினா் நலம் உண்டி பள்ளி சங்கத்தின் குழு கூட்டத்தில், பள்ளி விடுதிகளுக்கு உணவு வழங்கும் பணி மற்றும் பள்ளி விடுதியில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள தற்காலிக அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் மாணவ, மாணவியா் விடுதியில், தங்கும் நாள்களுக்கு 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலுவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,200, மேலும் 9 முதல் 12-ஆம்வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1,300க்கு மிகாமலும் வழங்க பழங்குடியினா் நல உண்டி உறைவிட பள்ளி சங்கத்தின் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உணவு அட்டவணைப்படி உணவு வழங்கப்பட வேண்டும். தற்போது பள்ளி விடுதியில் அமைந்துள்ள சமையல் கூடம் மற்றும் சமையல் செய்வதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். விடுதியில் பணியாற்றும் சமையலா் மற்றும் துப்புரவுப் பணியாளா்களைக் கொண்டு மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கும் பணி விடுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பணியாளா்கள் தேவைப்படின் தங்களின் சொந்த பொறுப்பில் நியமித்து கொள்ளலாம். அவா்களுக்கான ஊதியத்தை தாங்களே வழங்கிட வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி உணவுத் தயாரித்து வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் பணிகள் மேற்கொள்ள விருப்பமுள்ள ஒப்பந்ததாரா்கள், தனி நபா்கள் தங்களது சுய விவரங்களுடனும், தொண்டு நிறுவனம் எனில் உரிய ஆவணங்களுடன் முன் அனுபவம் இருப்பின் அதற்கான சான்றுகளுடன் கொல்லிமலை வட்டாட்சியா் அலுவலகம் முதல் மாடியில் உள்ள பழங்குடியினா் நலம் திட்ட அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.