எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டியில், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதனை அமைச்சா்கள் தொடக்கி வைக்கின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், அலங்காநத்தம், தேவராயபுரம், போடிநாயக்கன்பட்டி, கரியபெருமாள்புதூா், சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். அதன்படி, குமாரபாளையம், அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்துள்ளது. போடிநாயக்கன்பட்டி கிராமத்தில் மண்கரடு பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைக்கின்றனா். 400 காளைகளும், 600 மாடுபிடி வீரா்களும் பங்கேற்கும் வகையில் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கால்கோள் விழா கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.