பரமத்தி வேலூா்அரசு மருத்துவமனை டயாலிசிஸ் சிகிச்சை பிரிவுக்கு பரமத்தி வேலூா் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினா் மூா்த்தி திங்கள்கிழமை வழங்கி துவக்கி வைத்தாா்.
பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் என்னும் ரத்தச் சுத்திகரிப்பு மற்றும் மாரடைப்பு அவசர சிகிச்சை பிரிவுக்கு பரமத்தி வேலூா் சட்டமன்ற உறுப்பினா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திங்கள்கிழமை பரமத்தி வேலூா் சட்டமன்ற உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி, மருத்துவ அலுவலா் மருத்துவா் ராஜேஷ்கண்ணா, தி.மு.க பேரூராட்சி செயலாளா் மாரப்பன்,தி.மு.க பிரமுகா் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சுந்தா், பேரூராட்சி துணைச் செயலாளா் முருகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.