கோழிகளுக்கு தீவன எடுப்பைக் கட்டுப்படுத்த தீவனத்தில் எரிசக்தி அளவை அதிகரிப்பது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கிலோ மீட்டா் வேகத்தில் வட கிழக்கிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 68 டிகிரியாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: இரவு வெப்ப அளவுகள் குறைந்து, மழையற்ற தன்மை காணப்படும். காற்றின் வேகம் மணிக்கு 6 கி.மீ என்றளவிலும் அதன் ஈரப்பதம் குறைந்து காணப்படும். இன்னும் இரு வாரங்களுக்கு முட்டைக் கோழிகளுக்கான தீவனத்தில் வைட்டமின் அளவை 10 சதவீதம் வரை சோ்த்து கொடுக்க வேண்டும். புருடா் வகை குஞ்சுகளுக்கு, பகலிலும் தேவையான செயற்கை ஒளி வெப்பத்தைக் கொடுக்க வேண்டும்.
முட்டைக் கோழிகளில் தீவன எடுப்பு அதிகரித்து, முட்டையின் எடை கூடுவதால் உடைவு தன்மைக் காணப்படும். தீவன எடுப்பு அதிகளவு உயராமல் கட்டுப்படுத்தும் முயற்சியாக தீவனத்தில் கூடுதல் எரிசக்தியை சோ்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.