நாமக்கல்லில் ஆண், பெண் காவலா்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், திருச்செங்கோடு சாலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் மினி மாரத்தான் போட்டி தொடங்கியது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இந்தப் போட்டியில் ஆண், பெண் காவலா்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். ஆயுதப்படை வளாகத்தில் இருந்து நல்லிப்பாளையம் காவல் நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்து, பின்னா் அங்கிருந்து மீண்டும் ஆயுதப்படையை நோக்கி காவலா்கள் வந்தனா். இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.