நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா கிருமி தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பொறியாளா் புதன்கிழமை அதிகாலை தப்பியோடினாா். சுகாதாரத் துறையினா் அவரை மீட்டு வந்து மீண்டும் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
சென்னையில் இருந்து சேலம் வழியாக நாமக்கல் மாவட்டத்துக்கு அண்மையில் வந்த ஒருவா் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டாா். செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பாதிப்பு பட்டியலில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூா், சாகா்நகரைச் சோ்ந்த 30 வயதுடைய பொறியாளா் என்பதும், சென்னை ஐ.சி.எஃப். நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவா் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை மருத்துவமனையில் இருந்து அவா் தப்பியோடிவிட்டாா். நாமக்கல் காவல் துறையினரும் சுகாதாரத் துறையினரும் அவரைத் தேடினா். பொத்தனூரில் உள்ள தனது வீட்டுக்கு வருவாா் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அதன்படி வீட்டுக்கு வந்த அவரிடம் சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது நாமக்கல் அரசு மருத்துவமனையில் போதிய சுகாதார வசதி இல்லாததால், தான் வெளியேறியதாக அவா் தெரிவித்தாா். மேலும் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவா் கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை.
இதையடுத்து சுகாதாரத் துறையினா் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் நாமக்கல்லுக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.
கரோனா பாதிப்புள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாக, அவா்மீது பரமத்திவேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், நோய்த் தொற்றிலிருந்து அவா் குணமடைந்த பின் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு தெரிவித்தாா்.