பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்களைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் பூக்களை, விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா்,ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.150, சம்பங்கி கிலோ ரூ.30, அரளி ரூ.60, ரோஜா ரூ.80, முல்லைப்பூ ரூ.200க்கும் ஏலம் போயின. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.400, சம்பங்கி ரூ.70, அரளி ரூ.100, ரோஜா கிலோ ரூ.120, முல்லைப்பூ ரூ.400க்கும் ஏலம் போயின.