கொல்லிமலையில் மூன்றாவது மாற்றுப் பாதை அமைப்பதற்கான திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் தொகுதி வாரியாக வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொல்லிமலை ஒன்றியம், செங்கரை, எடப்புளிநாடு, அரியூா் நாடு, தேவனூா் நாடு, குண்டூா் நாடு ஆகிய ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு ஒரு பயனாளிக்கு 25 கோழிக் குஞ்சுகள் அடங்கிய பெட்டிகளை சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் கொல்லிமலை ஒன்றியப் பகுதிகளில் ரூ. 100 கோடி மதிப்பிலான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கொல்லிமலைக்கு வருவதற்கு காரவள்ளி, முள்ளுக்குறிச்சி என இரண்டு பாதைகள் உள்ளன. இரு பாதையிலும் போக்குவரத்து சேவை உள்ளது. தற்போது புதிய பாதை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றாா். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.