நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் வருகைப்பதிவேடு விவரங்கள் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட கல்வி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்குகளால் அரசு தேர்வை ரத்து செய்ததுடன் அனைத்து மாணவ மாணவியரும் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்களை தயார் செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் உள்ள 303 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மாணவ மாணவியரின் வருகைப்பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் அவற்றை பெற்றார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 மார்ச் 16 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 வகுப்பு விடுபட்ட தேர்வு எழுத இருந்த மாணவ மாணவியருக்கு பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலும் வருகை பதிவு பெறப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் தவிர்த்து பிற ஆசிரியர்கள் இதில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.