கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளா்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவா் தண்டபாணி தலைமை வகித்தாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் மனோகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் நூறு சதவீதம் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் வரும் புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடை பணியாளா்கள் கடைகளை அடைத்து விட்டு திரளாக பங்கேற்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் ராஜசேகா், மாவட்ட பொருளாளா் மூா்த்தி மற்றும் பல்வேறு ஒன்றியங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.