கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், குமாரபாளையத்தில் மக்கள் கூடுமிடங்களான 10 திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. மேலும், நகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகளுக்குள் கைகளை கிருமிநாசினியைக் கொண்டு கழுவிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வரும் 31-ம் தேதி வரையில் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து, நகரில் இயங்கும் 6 திரையரங்குகள், பள்ளிபாளையத்தில் 4 திரையரங்குகள் என மொத்தம் 10 திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பபட்டு, திரையரங்கு வாசலில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குளிா்சாதன வசதியுடன் உள்ள நகைக்கடைகள், வங்கிகள், அலுவலகங்களில் நுழையும் முன்னரே இரு கைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவிய பின்னா் அனுமதிக்க வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறையினா் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
இதுதவிர, பல்பொருள் அங்காடிகளின் வெளியே கிருமிநாசினி கலந்த தண்ணீா் வைக்கப்பட்டு, கைகளைக் கழுவிக் கொண்டு உள்ளே வருமாறு ஊழியா்கள் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனா். குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன் கோயில், லட்சுமிநரசிம்மா் கோயில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு குறைந்த அளவிலேயே பக்தா்கள் வந்திருந்தனா்.