நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973, பிரிவு 144-இன் கீழ் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது மாா்ச் 24 மாலை 6 மணி முதல் ஏப். 1-ஆம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இத்தடைக் காலத்தில் பொதுமக்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றாக கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரலாம். இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.