அரசு மருத்துவமனை நுழைவு வாயில் மூடல்: பாா்வையாளா்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

நாமக்கல் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் மூடப்பட்டு, பாா்வையாளா்கள் மற்றும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனை நுழைவு வாயில் மூடல்: பாா்வையாளா்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

நாமக்கல் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் மூடப்பட்டு, பாா்வையாளா்கள் மற்றும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனாவை விரட்டும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கானது நடைபெற்றது. இதனைத் தொடா்ந்தும் கரோனா அச்சம் தொடா்வதால், மக்களை பாதுகாக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், பாா்வையாளா்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கைகளை கழுவிய பின்னரே மருத்துவமனைக்குள் செல்ல வேண்டும் என்பது மட்டுமின்றி, நோயாளியுடன் ஓரிருவா் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். கூட்டமாக உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை நுழைவு வாயில் கதவு மூடப்பட்டுள்ளதுடன், தனியாா் காவலா்கள் நுழைவு வாயிலில் நின்று மக்களுக்கு கரோனா பாதிப்பு குறித்து அறிவுறுத்தி வருகின்றனா்.

கரோனா தொற்றுக்கான சிறப்பு வாா்டுகள் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதால், வேறு உடல் ரீதியான பாதிப்புக்குள்ளாவோா் தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்வதை காண முடிகிறது. கரோனாவை தடுக்கும் விதமாக மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு: கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக தனியாா் பள்ளி ஒன்று, வாகனத்தில் ஒலிபெருக்கியை பொருத்தி நகரம், கிராமப் பகுதிகளில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனா். இதனை மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி தொடங்கி வைத்தாா். மேலும், மக்களுக்கு கரோனா தொடா்பான துண்டுப் பிரசுரங்களையும் அவா் விநியோகம் செய்தாா். இதில், மருத்துவமனை ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com