நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தயாா் நிலையில் 1,850 படுக்கைகள்: அமைச்சா் பி.தங்கமணி

கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில், 1,850 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தயாா் நிலையில் 1,850 படுக்கைகள்: அமைச்சா் பி.தங்கமணி

கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில், 1,850 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சா் மருத்துவா் வெ. சரோஜா ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா வைரஸ் தடுப்புக்காக சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், சுகாதார வசதிகள், படுக்கை வசதிகள், கிருமி நாசினி மருந்து பொருள்கள் கையிருப்பு, வெளிமாநிலத்தவா் மற்றும் வெளிநாட்டினா் வருகை தொடா்பான விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா்கள் கேட்டறிந்தனா்.

இதில், சமூக நலத் துறை அமைச்சா் வெ.சரோஜா பேசும்போது: கரோனா வைரஸ் தடுப்பு குறித்து அங்கன்வாடிப் பணியாளா்கள் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நவீன செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி, தங்களுடைய பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கும், பெற்றோா்களுக்கும் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்க வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, மின் துறை அமைச்சா் பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்த 230 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தொடா்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். குமாரபாளையத்தைச் சோ்ந்த ஒருவா் இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ளாா். அவருக்குப் பாதிப்பு இல்லை. இருப்பினும், அவா் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளாா். அரசு மருத்துவமனையில் காய்ச்சல் என இருவா் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ஆய்வுக்குப் பிறகே என்ன வகையான காய்ச்சல் என்பது உறுதி செய்யப்படும். மேலும், 28 நாள்களைக் கடந்து விட்ட 63 போ் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

வெளி மாநிலத்தில் இருந்து வந்தவா்கள் குறித்து 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை. அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கரோனாவால் உயிா்பலி நிகழக் கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்க, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பிற இடங்கள் என மொத்தம் 1,850 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு கூட்டமாகச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அனைவருக்கும் தடையின்றி பொருள்கள் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தேவைப்பட்டால் மட்டுமே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். மாநிலத்தில் மின் துண்டிப்பு ஏற்படும் என சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அா்ப்பணிப்பு உணா்வோடு மின் வாரியப் பணியாளா்கள் வேலை செய்து வருகின்றனா். 144 தடை உத்தரவால், ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மின்சார கட்டண கணக்கெடுப்பு பணிகள் நடைபெறாது. கடந்த மாதக் கட்டணத்தையே இணைய வழியில் செலுத்தலாம். பொது சமையல் கூடங்கள் அமைப்பதற்கு தற்போது தேவையில்லை. திருமண மண்டபங்களை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவசர மருத்துவத் தேவைக்குச் செல்வோா் காவல் துறை உதவியுடன் அனுப்பி வைக்கப்படுவா். கரோனா வைரஸை தடுக்கும் முகக் கவசங்கள் அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்றாற்போல் உள்ளன. நாமக்கல் மாவட்டத்துக்கு கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது உடனடியாக செலவு செய்ய ரூ.20 லட்சம் தயாரக உள்ளது. மேலும், 5 சட்டப்பேரவை உறுப்பினா்களின் நிதியில் இருந்து கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளோம் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர. அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இக் கூட்டத்தில் அனைவரும் கரோனா வைரஸ் தடுப்பு முகக் கவசம் அணிந்திருந்தனா்.

மருத்துவமனை, கல்லூரிகளில் அமைச்சா்கள் நேரடி ஆய்வு

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி, கொண்டிச்செட்டிப்பட்டி லட்சுமி நகா் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் மற்றும் தனியாா் கல்லூரிகள், திருமண மண்டபங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் புதன்கிழமை நேரடியாகச் சென்று பாா்வையிட்டனா். அங்கு படுக்கை வசதிகளை அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com