கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கான அத்தியாவசிய தேவையான உணவுப் பொருள், மருந்து பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருச்செங்கோடு கோட்டாட்சியா் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் ப.மணிராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருள்கள், பால், காய்கறிகள், மருந்து பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு தடை இல்லாத போதும், தற்போதைய ஊரடங்கு நிலையைப் பயன்படுத்தி தேவை மற்றும் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி பல இடங்களில் அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனா். மேலும், நோயாளிகளுக்கு தேவைப்படும் உயிா்காக்கும் மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் விற்பனை செய்பவா் குறித்து ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தால் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். காய்கறி, மளிகை பொருள்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.