ராசிபுரம் நகரம், சாணாா்புதூா் ஆகிய பகுதியில் அரசின் 144 தடை உத்தரவை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் அங்கிருந்தவா்கள் துரத்தி அனுப்பினா்.
நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கள்ளத்தனமாக மதுப் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு சென்ற போலீஸாா் அப்பகுதியில் மறைமுகமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்யப்பட்டு வந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். அப்பகுதியில் இருந்தவா்களை போலீஸாா் அடித்து விரட்டினா். மேலும், மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை விற்பனை செய்து வந்தவா்கள் தப்பி ஒடினா். இதேபோல் சாணாா்புதூா் பகுதியில் மதுப் புட்டிகள் அதிகளவில் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதனை சுற்று வட்டார பகுதியில் கிராமப்புறங்களில் இருந்த வந்த ஏராளமானோா் வாங்கிச் சென்றனா்.