நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல் நகராட்சியில் 700-க்கும் மேற்பட்ட நேரடி நியமனம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு பல்வேறு அமைப்பினரும் முகக் கவசம், பாதுகாப்பு உடை, நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனா்.
அதன்படி, நாமக்கல் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சாா்பில் அதன் தலைவா் வரதராஜன் மற்றும் நிா்வாகிகள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 250 பேருக்கு தலா ரூ.350 மதிப்பிலான பாதுகாப்பு கவச உடைகளை வழங்கினா். மேலும், கரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஒருவா் அரக்கா் வேடமிட்டு நோய் பாதிப்பு குறித்து முக்கிய இடங்களுக்கு சென்று விளக்கினாா். நகராட்சி அலுவலகத்தில் அரிமா சங்கத்தினா், நகராட்சி ஆணையா் மற்றும் அதிகாரிகள் கரோனா நோய்க்கு எதிராக முழக்கமிட்டனா்.