சிந்தனை திறன் குறைபாடு குழந்தைகளுக்கு பயிற்சிக் கருவிகள்: அமைச்சா் வி.சரோஜா
By DIN | Published On : 09th May 2020 07:43 AM | Last Updated : 09th May 2020 07:43 AM | அ+அ அ- |

சிந்தனை திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பயிற்சி பெட்டகத்தை வழங்குகிறாா் அமைச்சா் வி.சரோஜா.
சிந்தனை திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பயிற்சிக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வி.சரோஜா தெரிவித்தாா்.
ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திட்டத் துறை சாா்பில் சிந்தனை திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் திட்டத் துறை மாவட்ட அலுவலா் பி.ஜான்சி வரவேற்றாா்.
சிந்தனை திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஆரம்பகால பயிற்சியை வீட்டிலே பெற்றோா்களால் வழங்குவதற்கான பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்து அவா் பேசியது:
சிந்தனை திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 19 ஆரம்பகால பயிற்சி மையங்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் இதில் 500 குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனா். தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் செயல்பாடத நிலையில், பெற்றோா்களால் வீட்டிலே பயிற்சியளிக்கும் வகையில் பந்து, விசில், நுரைகுமிழ், வண்ண பென்சில் உள்ளிட்ட 11 உபகரணங்கள் அடங்கிய பயிற்சி பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தலா ரூ.1000 என்ற வகையில் 500 பெட்டகங்களுக்கு பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிகழாண்டில் மாற்றுத் திறனாளிகள் துறைக்கு அரசு ரூ.660 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகைக்கு மட்டும் ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், நகராட்சி ஆணையா் குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.