கோயில் பராமரிப்பு காரணமாக இடிக்கப்படும் கட்டடங்களால் நாமக்கல் ஆஞ்சனேயர் சுவாமி மீது அதிகளவில் புழுதி படர்ந்து காட்சியளிப்பது பக்தர்களை கவலையடைய செய்துள்ளது.
நாமக்கல் நகரின் மத்தியில் 18 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் சுவாமி நின்றகோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருவர். கரோனா தொற்று பரவலால், மார்ச் 20ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதில் நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலும் அடங்கும். இக்கோயில் நடை சாத்தியிருந்த போதும் பக்தர்கள் வெளியில் நின்று சுவாமியை தரிசித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 50 நாட்களாக கோயில் மூடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் சுவாமிக்கு தினசரி காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில், ஆஞ்சனேயர் கோயிலின் உள்பிரகாரத்தில் தற்போது பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோயில் முழுவதும் கட்டட இடிபாடுகளின் புழுதி படர்ந்து காணப்படுகிறது. அந்த புழுதிப் படலம் ஆஞ்சனேயர் சுவாமி மீதும் படர்ந்து காணப்படுவதால் கோயிலுக்கு வெளியில் நின்று சுவாமியை தரிசிக்கும் பக்தர்கள் கவலைக் உள்ளாகியுள்ளனர். அந்தப் புழுதி படலத்தை சுத்தம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும்.
தங்க கவசத்திலும், வெள்ளிக் கவசத்திலும், முத்தங்கி அலங்காரத்திலும், வெண்ணைக்காப்பு அலங்காரத்திலும், 1008 வடைமாலை அலங்காரத்திலும் சுவாமியைப் பார்த்து பரவசப்பட்ட நிலையில் தற்போது புழுதி படர்ந்து ஆஞ்சனேயர் சுவாமி காட்சியளிப்பது வேதனையாக உள்ளது. சாமி சிலையை தினமும் சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோயில் அலுவலர்கள் கூறியது: ஆஞ்சனேயர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக சுவாமியின் வலதுபுற பகுதியிலுள்ள தரைத்தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் பக்தர்கள் அதிகளவில் அமர்ந்து இளைப்பாற முடியும். பாலாலய காலத்தில் மட்டுமே சிலைகளை மறைக்க முடியும். தற்போது பராமரிப்பு பணி மட்டுமே நடைபெறுகிறது. சுவாமி மீது படர்ந்துள்ள புழுதி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் நிறைவடைந்து கோயில் அழகுற காட்சியளிக்கும். பக்தர்கள் கவலையுற தேவையில்லை என்றனர்.