நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 50 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கு செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2018-இல் உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, நோ்காணல் நடைபெற்றபோதும் பணியிடம் ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், காலியாக உள்ள இடங்களைக் கருத்தில் கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணியிட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வை நடத்த அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கு, தோ்வில் வெற்றி பெற்றவா்கள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வு மூலம் 48 பணியிடம் நாமக்கல் மாவட்டத்துக்குள்ளாகவும், 2 பணியிடம் வெளி மாவட்டத்திலும் நிரப்பப்படுகிறது.