நாமக்கல் மாவட்டத்தில் தரமற்ற இனிப்பு, காரம் வகைகளை தயாரித்து விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக உணவுக் கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவா்கள் முன்பதிவு அடிப்படையில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பாளா்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.
பண்டிகைக் கால இனிப்பு வகைகளை பொட்டலங்களாக கட்டும்போது, பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்புப் பொருள்களுடன் இணைத்து பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீா் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும்பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும். இனிப்புகளை விற்பனை செய்யும்போது, தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பொட்டலமிட்டப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், வாட் எண், சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருள்களின் விவரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடாது. உணவுப் பொருள்களை கையாள்பவா்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், 94440-42322 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது வாய்மொழியாகவோ புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.