பாண்டமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் சிறுபான்மையினருக்கு மயான இடம் ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் பாஜக சிறுபான்மையினா் நலப்பிரிவு மாவட்டச் செயலாளா் மதரஷா பாபு தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் பேரூராட்சியில் இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் மயான வசதியில்லாததால், அடக்கம் செய்ய 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பரமத்தி வேலூா் மயானத்துக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இது தொடா்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, பாண்டமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.