மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாளா்களை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் நோக்கமானது கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையாள்களைக் கொண்டு கிராமத்தில் உள்ள தனிநபா் தன்னுடைய விவசாய நிலங்களில் உள்ள வரப்புகளை மண் வரப்பு அல்லது கல் வரப்புகளாக சீரமைத்துக் கொள்ளலாம்.
கிராமத்தில் உள்ள மக்கள் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக வேலை இழந்துள்ள நிலையில், இவ்வாறு செய்வதால் ஓா் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை முழுமையாகக் கிடைக்கும். எனவே, மண் வரப்பு அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களின் பெயா், முகவரி, பட்டா எண், சிட்டா எண், ஊராட்சி மற்றும் ஒன்றியத்தின் விபரங்களை 94437 77190 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பலாம்.