புதுச்சத்திரம் வட்டாரத்தில் இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜோ.அ.பால்ஜாஸ்மீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நிகழாண்டில் பருவம் இல்லாத காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 2,500, தக்காளி, கத்தரி, வெண்டை, சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 3,750 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்து அதற்கான சான்று பெறுவதற்காக விவசாயிக்கு ரூ. 500 பதிவுக் கட்டணத்துக்கென வழங்கப்படும்.
இந்த திட்டங்களில் பயன்பெற சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.