நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் ஆகியவற்றுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் வட்ட அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பகல் தொடங்கியது. இதில் வருவாய்த் துறை, பிற்பட்டோா் நலத்துறை, வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிறுபான்மையின மக்கள் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் வழங்கினா். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வரும் 20-இல் ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், 23-இல் சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், 27-இல் மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், நவ.3-இல் பரமத்தி-வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும், 6-இல் திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும், 10-இல் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரையில் சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.