நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் 64 மனுக்கள் பெறப்பட்டன.
கரோனா தொற்று காரணமாக வட்டாட்சியா் அலுவலகங்களில் மண்டல அலுவலா்கள் தலைமையில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் திங்கள்கிழமை நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூா், கொல்லிமலை, பரமத்தி-வேலூா் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தமாக 64 மனுக்கள் பெறப்பட்டன. சமூக இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூட்டமானது நடைபெற்றது. பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை முதியோா், விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி வழங்கப்பட்டன. மனுக்களைப் பெற்று கொண்ட மண்டல அலுவலா்கள் தகுதியான நபா்களுக்கு நலத்திட்ட உதவிகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.