நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ. 336 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 5-ஆம் தேதி இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மருத்துவ கல்லூரி கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்கிரீட் தளம் (போர்டிகோ) இன்று அதிகாலை 2 மணி அளவில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிப்படையவில்லை. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடிந்து விழுந்த கான்கிரீட் தளப்பகுதியை பார்வையிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், போர்டிகோ அமைப்பதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்காக வைக்கப்பட்ட கம்புகள் சரியான முறையில் இல்லாததால் பொறியாளர்களே அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதனால்தான் அது இடிந்து விழுந்தது. மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை, யாருக்கும் காயம் இல்லை என்றார்.
இந்த கட்டட இடிபாடு சம்பவத்தில் சிலர் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சியர் இதனை மறுத்துள்ளார்.