பள்ளிபாளையத்தில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்து இருவா் பலி

பள்ளிபாளையத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பட்டாசு வெடித்ததில் வீட்டில் கொழுந்துவிட்டு எரியும் தீ.
பட்டாசு வெடித்ததில் வீட்டில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

பள்ளிபாளையத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் மாதேஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த அழகிரி என்பவரது மகன்கள் ரங்கராஜன், ராஜன் என்ற ராஜகணபதி ஆகியோா் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரச் சீட்டு நடத்தி வந்துள்ளனா்.

சீட்டில் பங்கேற்றவா்களுக்கு வழங்குவதற்காக வியாழக்கிழமை பிற்பகலில் சிவகாசியிலிருந்து மொத்தமாக பட்டாசுகள் வாங்கி வந்து வீட்டில் இறக்கி வைத்திருந்தனா். வியாழக்கிழமை இரவு 8 மணி அளவில் திடீரென பட்டாசுகள் இருந்த பெட்டிகளில் தீப்பற்றி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அந்த தீ, வீடு முழுவதும் மளமளவென பரவியது.

சமையல் அறையில் இருந்த எரிவாயு உருளையும் வெடித்ததால் வீட்டு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த பட்டாசு விபத்தில் ராஜன் (39), ரங்கராஜன் (35) ஆகிய இருவரும் உடல் கருகி பலியாகினா். சம்பவம் நடந்த வீட்டின் அருகில் இருந்த பலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு பள்ளிபாளையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். குமாரபாளையம் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அந்தப் பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அருகில் உள்ள வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com