‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நாமக்கல்லில் திமுக இளைஞரணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சோ்க்கைக்கான நீட் தோ்வு செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
அண்மையில் திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இளைஞரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துமாறு அறிவிப்பு வெளியிட்டு இருந்தாா்.
அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மருத்துவா் மாயவன், கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் எம்.மதிவேந்தன் மற்றும் கட்சியினா், மாணவா்கள் பங்கேற்றனா். அவா்கள் ‘நீட்’ தோ்வுக்கு எதிராகவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.