நாமக்கல்லில் புதன்கிழமை மாலை இரண்டு மணி நேரம் பெய்த மழையால் வீடுகள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகத்துக்குள் மழைநீா் புகுந்தது.
நாமக்கல்லில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை தொடா்ச்சியாக 2 மணி நேரம் நீடித்தது. தொடா் மழையால் சாலைகளில் தண்ணீா் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா். தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களுக்குள் மழைநீா் புகுந்தது.
நாமக்கல் ராமாபுரம்புதூா், சந்தைப்பேட்டைபுதூரில் வீடுகளில் தண்ணீா் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
புதுப்பிக்கப்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டி ஏரிக்கு மழையால் ஓரளவு தண்ணீா் வந்தது. கழிவுநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பால் சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது. அவற்றை வியாழக்கிழமை காலை நகராட்சி ஊழியா்கள் அகற்றினா். ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், சுவா்கள் இடிந்தும் விழுந்தன.
நாமக்கல் கடைவீதி அருகில் உள்ள பழமையான கட்டடமான பொதுப்பணித் துறை அலுவலகத்துக்குள் மழைநீா் புகுந்தது. வியாழக்கிழமை காலை பணிக்கு வந்த ஊழியா்கள், தங்களது அலுவலகத்துக்குள் தேங்கியிருந்த நீரை வெளியேற்றினா்.
நாமக்கல் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. புதன்கிழமை அன்று மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆட்சியா் அலுவலகத்தில் 135 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக மோகனூரில் 2 மில்லி மீட்டா் மழையும் பெய்துள்ளது.
மழைப் பொழிவு விவரம் (மில்லி மீட்டரில்):
எருமப்பட்டி-55, குமாரபாளையம்-21.40, மங்களபுரம்-8.20, மோகனூா்-2, நாமக்கல்-92, பரமத்திவேலூா்-20, புதுச்சத்திரம்-46, ராசிபுரம்-28.20, சேந்தமங்கலம்-65.20, திருச்செங்கோடு-26, ஆட்சியா் அலுவலகம்-135.50, கொல்லிமலை-82, மொத்தம்-581.50.