பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், போலீஸாா், பேரூராட்சியினா் மற்றும் சுகாதாரத் துறையினா் பரமத்தி வேலூா் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகள் உள்ளிடவைகளுக்கு அபராதம் விதித்தும், எச்சரிக்கை விடுத்தும் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாதாசாரிகள், காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோா் முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நாமக்கல் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அதனையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா், சுகாதாரத் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் முகக் கவசம் அணியாமல் வந்த 52 பேருக்கு ரூ. 10 ஆயிரத்து 400 அபராதம் விதித்தனா். மேலும், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மருந்தகம் மற்றும் பேக்கரி ஆகியவற்றுக்கு ரூ. 7 ஆயிரம் என மொத்தம் ரூ. 17 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.