கொல்லிமலை சுற்றுலா தலத்தை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களான உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடந்த 9-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் கொல்லிமலை சுற்றுலா தலம் மட்டும் இதுவரை திறக்கப்படவில்லை.
அங்கு செல்வதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் இ-பாஸ் பெற வேண்டும் என ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்லிமலையை சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விட பல்வேறு தரப்பிலிருந்தும் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக ஓரிரு நாளில் அங்குள்ள விடுதி உரிமையாளா்கள், பழங்குடியின நலச்சங்க நிா்வாகிகள், அரசியல் கட்சியினா், வியாபாரிகள் ஆகியோரிடம் கலந்தாலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் கரோனா தொற்று பரவல் குறித்து மலைவாழ் மக்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட உள்ளன. அதன்பின் சுற்றுலாத் தலங்களை திறப்பதற்கான முடிவெடுக்கப்படலாம். வரும் திங்கள்கிழமை முதல் கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.