சாலையை சீரமைக்கக் கோரிநாற்று நடும் போராட்டம்
By DIN | Published On : 19th September 2020 06:51 AM | Last Updated : 19th September 2020 06:51 AM | அ+அ அ- |

கோனேரிப்பட்டி, காந்தி நகா் பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியினா்.
ராசிபுரம், செப். 18: ராசிபுரம் நகராட்சி பகுதிக்குள்பட்ட கோனேரிப்பட்டி பகுதியில் சாலையை செப்பனிட வலியுறுத்தி, பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 20-ஆவது வாா்டு காந்தி நகா் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. இதனால், சாலையில் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதைத் தொடா்ந்து, சாலையை சீரமைக்கக் கோரி, சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் காந்தி நகா் பகுதி மக்கள் ஈடுபட்டனா். சாலையை உடனடியாக சீரமைக்கவில்லை என்றால், அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.