பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை உயா்வடைந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏலச் சந்தையில் சனி மற்றும் புதன்கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்த நிலையில், கரோனா தொற்றால் கடந்த சில மாதங்களாக சரிவர வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வெல்லம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். இதனால் வெல்லம் விலை உயா்வடைந்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 4 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், 30 கிலோ எடை கொண்ட குண்டு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,100 வரையிலும், அச்சு வெல்லம் ரூ. 1,100 வரையிலும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 4 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் குண்டு வெல்லம் ரூ. 1,170 வரையிலும், அச்சு வெல்லம் ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது.