நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகளில் வாகனச் சோதனையில் ரூ.11.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும், தோ்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடாவைத் தடுக்கும் வகையில், பறக்கும் படை குழுவினா் ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி நாமக்கல், கீரம்பூா் சோதனைச் சாவடி அருகில் புதன்கிழமை அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனா். அதில் ரூ. 4.81 லட்சம் உரிய ஆவணங்களின்றி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா். இதேபோல், பேளுக்குறிச்சி அருகே கல்குறிச்சியில் லாரியை மடக்கி சோதனையிட்டதில் ரூ. 3.30 லட்சம் ஆவணங்களின்றிக் கொண்டு செல்வது தெரியவந்ததை அடுத்து அத்தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுநா் கருப்பையா என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். மேலும் நாமக்கல் - மோகனூா் சாலையில் அரசு கலைக் கல்லூரி அருகில் சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டதில் ரூ. 3.05 லட்சம் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டறிந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் மொத்தமாக ரூ. 11 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.