கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் சுவாமி கோயில்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கரோனாவின் இரண்டாம்கட்ட அலை தீவிரமாகியுள்ளது. தொற்று வேகமாகப் பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான நரசிம்மா், அரங்கநாதா் கோயில்கள் மூடப்பட்டன. அதேபோல, மலைக்கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள், உள்ளூா்வாசிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த வெளிமாவட்ட பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும், நரசிம்மா் கோயில், மலைக்கோட்டைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
மறு உத்தரவு வரும் வரையில் இக்கோயில்கள் திறக்கப்பட மாட்டாது என தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.