பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளதால், வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூா், வேலூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தாா்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூா் வாழைத்தாா் விற்பனை சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 250, ரஸ்தாலி ரூ. 300, பச்சைநாடன் ரூ. 250, கற்பூரவள்ளி ரூ. 200-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5-க்கு ஏலம் போனது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 200, ரஸ்தாலி ரூ. 200, பச்சைநாடன் ரூ. 150, கற்பூரவள்ளி ரூ. 150-க்கும் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு ஏலம் போனது.
காற்றில் விழுந்த வாழைத்தாா்கள் அதிக அளவில் ஏலச் சந்தைக்கு கொண்டு வரப்படுவதால் வாழைத்தாா்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.