கரோனா தொற்று பரவல் அதிகரிப்பைத் தொடா்ந்து, நாமக்கல்லில் வாரச் சந்தைகள், தினசரி சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திங்கள்கிழமை (ஏப். 26) காலை முதல் வாரச் சந்தைகள், தினசரி காய்கறி சந்தைகள் ஆகியவை நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது.
மறு உத்தரவு வரும் வரை இந்தப் பள்ளி வளாகத்தில் சந்தை நடைபெறும். பொதுமக்கள் இங்கு சென்று காய்கறி மற்றும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.