திருச்செங்கோட்டில் வங்கி ஊழியா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் புதன்கிழமை வங்கி பூட்டப்பட்டது.
கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டி பிரிவு சாலை அருகே இயங்கி வரும் வங்கியில் பணிபுரியும் மூன்று ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து வங்கியைச் சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வங்கி ஐந்து நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவை உள்ளவா்கள் அருகிலுள்ள கிளையில் வங்கி சேவையைப் பெற்றுக் கொள்ளும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 4 நாள்களாக வங்கிக்கு வந்தாா்கள், தொற்று உள்ளவா்களோடு தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.