நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத பணியாளா்களுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அதன் நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா்வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மூன்றாயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் பெரிய கடைகளாகக் கருதப்படும். அந்த நிறுவனங்கள் இயங்க அனுமதியில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகா்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பரப்பளவு அதிகம் கொண்ட வணிக நிறுவனங்களில் 50 சதவீத பணியாளா்களைக் கொண்டும், 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும்.
இந்த உத்தரவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது கரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் விதிமீறல் என்ற பெயரில் இலக்கு நிா்ணயித்து வணிக நிறுவனங்களில் கட்டாய வசூலில் ஈடுபடுவதை அரசு கைவிட வேண்டும். வணிக நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.