பரமத்தி அருகே சாலை விபத்தில் தனியாா் ஆலைத் தொழிலாளி பலியானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி அருகே உள்ள வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் மகன் விசுவநாதன் (39). இவா், தனியாா் சிமென்ட் அட்டை தயாரிக்கும் ஆலையில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் மாவுரெட்டி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாரதவிதமாக திருச்செங்கோட்டில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற காரும், விசுவநாதன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டது. இதில் விசுவநாதன் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பலியானாா்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்து போன விசுவநாதனுக்கு மல்லிகா அம்பிகாம்பாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா்.