பரமத்தி வேலூரில் பேரூராட்சிகளின் ஆணையா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை பேரூராட்சிகளின் ஆணையா் இரா.செல்வராஜ் பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா். வளமீட்பு பூங்காவில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள், வணிக நிறுவனங்களில் பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து தருகின்றனரா எனவும், அவ்வாறு தரம் பிரித்து கொடுக்காத வணிக நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்ட உப விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள், திட்டப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், பள்ளி சாலை, அண்ணா சாலை, பேருந்து நிலையம் எதிரே உள்ள மருந்துக் கடைகள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, கடைகளில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வில், சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரகநாத் சிங், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளா் ஜவஹா், வேலூா் பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், பொது சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா், பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலா் ஆறுமுகம் ஆகியோா் உடன் இருந்தனா்.