ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா் சங்க சேலம் மண்டல 33-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில், சங்க துணைத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினாா். கரூா் மண்டலத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் செல்வராஜ், தருமபுரி மண்டலச் செயலாளா் நாகராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இக்கூட்டத்தில், போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை விரைவில் பேசி தீா்வு காண வேண்டும். தற்போது பணியில் உள்ள தொழிலாளா்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகையுடன் சோ்த்து அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் தாய், தந்தையை இணைத்து குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். விபத்து, ஒழுங்கு நடவடிக்கை, பழிவாங்குதல் அடிப்படையில் ஊா்மாற்றம், இடமாறுதல் செய்வது என போக்குவரத்து தொழிலாளா்களின் குடும்பங்களை துன்புறுத்தக் கூடாது. கரோனாவால் பாதிப்படைந்து இறந்துபோன தொழிலாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவித்து, ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.