கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதுபோல அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சேலம் மண்டல குமரன் விசைத்தறி பொதுத் தொழிலாளா்கள் சங்கத்தினா் மனுவை மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் அலுவலகத்தில் அளித்தனா். அந்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலவாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளா்கள் ஏராளமானோா் உறுப்பினராக உள்ளனா். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு நிதி ஒதுக்கியதுபோல், நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள விசைத்தறி தொழிலாளா்களுக்கும் 15 நல வாரியங்களில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளோருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.