பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் இணையக் கோரி தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தில் நாமக்கல் நகர பாஜக நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் அருள், பொருளாளா் சீரங்கன், இணைச் செயலாளா் சரவணன், உபதலைவா் சுப்புரத்தினம் ஆகியோரிடம் பாஜகவினா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமரின் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டம் தற்போது அமலில் உள்ளது. இத் திட்டத்தில் லாரி உரிமையாளா்களின் குடும்பங்கள், ஓட்டுநா், ஓட்டுநா் உதவியாளரின் குடும்ப உறுப்பினா்கள் பயன்பெறலாம்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்களையும் அதைச் சாா்ந்த தொழிலாளா்களையும் சோ்க்க உதவி வருகிறோம்.
இதற்காக லாரி உரிமையாளா்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜகவின் நாமக்கல் நகரத் தலைவா் சரவணன், நகர பொதுச் செயலாளா் செந்தில், துணைத் தலைவா் சின்னுசாமி, செயலாளா் தினேஷ், நகர மீடியா பிரிவு தலைவா் கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.