நல்லூா், கந்தம்பாளையம் அருகே மா்மமான முறையில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நல்லூா், கந்தம்பாளையம் அருகே வாழ்நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ராணி (50). இவரது மகன் வெள்ளையன் (30). இருவரும் கூலித் தொழிலாளா்கள். அதேபகுதியில் சுப்பிரமணி (30) என்பவா் தனியாக வசித்து வந்தாா். இவா்கள்களுக்குள் ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம்.
செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் வாழ்நாயக்கன்பாளையத்தில் சரஸ்வதி நகா் என்ற இடத்தில் வெள்ளையன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது குறித்து நல்லூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் வெள்ளையனின் தாயாா் ராணி, சுப்பிரமணி ஆகியோரின் வீடுகள் பூட்டப்பட்டு இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. தலைமறைவான இருவரையும் நல்லூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.