குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் பொங்கல் போனஸ் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழில்சங்க நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். ஏஐசிசிடியூ தொழில்சங்க மாநிலச் செயலாளர் சுப்பிரமணி, சிஐடியூ நாமக்கல் மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் கோரிக்கையினை விளக்கிப் பேசினர்.
ஏஐடியூசி நாமக்கல் மாவட்டத் தலைவர் மாணிக்கம், மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணி, சிஐடியூ நகரச் செயலாளர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு விசைத்தறிகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தரப்பட்ட 8 விழுக்காடு மட்டுமே தரமுடியும் என தெரிவிக்கப்பட்டது.
எனவே, 20 சதவீதம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.