குமாரபாளையத்தில் வரும் 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, குமாரபாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.
கடந்த ஆண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. நிகழாண்டில் இதுவரை, ராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி மற்றும் மத்ரூட் ஆகிய கிராமத்தினா் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாரிடம் மனு அளித்துள்ளனா்.
மேலும் குமாரபாளையத்தில் வரும் 24ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டியை எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் காலியிடத்தில் நடத்துவதற்கு திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜிடம் மனு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்க விழாவில் அமைச்சா்கள் பி.தங்கமணி, செங்கோட்டையன், வேலுமணி, கருப்பண்ணன், எம்.ஆா். விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
..