சுதந்திரப் போராட்ட வீரா்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற வருவாய்த் துறை அலுவலா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளை கெளரவித்தனா்.
நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், கரோனா பரவல் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கெளரவப்படுத்திட அரசு உத்தரவிட்டிருந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளை குடியரசு தின விழாவினை முன்னிட்டு அவரவா் இல்லம் தேடிச் சென்று மரியாதை செய்திட நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதன்படி, ராசிபுரம் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினரை ராசிபுரம் வட்டாட்சியா் கி.பாஸ்கரன் திங்கள்கிழமை நேரில் சென்று கெளரவித்தாா். ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் சுதந்திரப் போராட்ட வீரா் கந்தசாமி மனைவி மாராயம்மாள் இல்லம் தேடிச் சென்று அவருக்கு சால்வை அணிவித்தும், பழங்கள் வழங்கியும் கௌரவப்படுத்தினா். இதில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கச் செயலா் க.சிதம்பரம் உள்ளிட்டோா் இருந்தனா்.