பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் பயிா் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளதால், கபிலா்மலை தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதகுறித்து கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், காய்கறி விதைகள், சின்ன வெங்காய நாற்றுகள், வாழைத்தாா் உறை மற்றும் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அங்கக முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 5,000, அங்ககச் சான்றிதழ் பெற ரூ. 500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாளி, புடலை, பீா்க்கன், பாகல் மற்றும் மலா் பயிா்களான மல்லிகை, சம்பங்கி ஆகியவை சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம் அல்லது கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.